Translate

Sunday, April 10, 2016

information about joint pain and quality of life in Tamil

மூட்டு வலியும் வாழ்க்கை தரமும்
55 வயதுமிக்க சாவித்திரி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்மணி மூட்டு வலியினால் அவதிப்படுகிறார் வலி அதிகம் ஆகும் பொழுது, தூக்கம் இன்றி தவிக்கிறார். அவரால் வெளியே சுதந்திரமாக நடக்க இயலவில்லை மற்றவரை சார்ந்தே உள்ளார்.
மூட்டு வலி என்பது மிக சாதரணமாக மக்களை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். மூட்டு வலி மிக அதிகமாகும் பொழுது, ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை குறைத்து விடுகிறது. இப்போது இது எப்படி என்று பார்க்கலாம்.
வாழ்க்கைத்தரம் என்பது ஒருவருடைய அல்லது ஒரு நாட்டினுடைய மதிப்பீடாக அமைந்து உள்ளது. வாழ்க்கைத்தரம் என்பது நமது வருமானத்தையோ, வசதிகளையோ வைத்து மட்டும் நிர்ணயிப்பதில்லை. நமது உடல் மற்றும் மன நலமின்மை ஆகியவை இந்த வாழ்க்கைத்தரம் வெகுவாக கீழ்நோக்கி சரிய வைத்து விடுகிறது.
இப்போது, கீழே உள்ள 12 கேள்விகளை படிக்கவும்:
1.      நீங்களாகவே ஆடையை அணிந்து கொள்கிறீர்களா?
2.      எந்த வித உதவியின்றி கட்டிலிலிருந்து எழுந்திருக்க முடிகிறதா?
3.      தண்ணீர் நிறைந்த டம்ளரை வாயருகே கொண்டு செல்ல முடிகிறதா?
4.      கடை தெருவுக்கு சென்று வர முடிகிறதா?
5.      எந்த வித உதவியின்றி உங்கள் உடம்பை சுத்தம் செய்து கொள்ள முடிகிறதா?
6.      சாதாரண கழிவறையில் அல்லது தரையில் காலை மடித்து உட்கார முடிகிறதா?
7.      கீழே குனிந்து துணிகளை எடுக்க முடிகிறதா?
8.      தண்ணீர் குழாயை திறந்து மூட முடிகிறதா?
9.      பேருந்து / ஆட்டோ இவைகளில் ஏறி இறங்க முடிகிறதா?
10.   குறைந்தது 3 கிலோ மீட்டர் நடக்க முடிகிறதா?
11.   காய்கறிகள் வாங்குவதற்கு செல்ல முடிகிறதா?
12.   மாடிப்படிகளில் ஏறி இறங்க முடிகிறதா?
ஒரு ஆணோ பெண்ணோ தனது வாழ்நாளில் இந்த 12 செயல்பாடுகளை வலி இல்லாமல் செய்ய இயலவில்லை எனில், உடல் ரீதியில் அவரின் வாழ்க்கைத்தரம்  குன்றி இருப்பாதாக அறிந்து கொள்ளலாம். மேலே கூறப்பட்ட பெண்மணியினால் இந்த செயல்பாடுகள் செய்ய இயலவில்லை.


மூட்டு வலியினால் பாதிப்படைந்த இந்த பெண்மணியின் உடல் நிலை மட்டுமல்லாது, மனநிலையும் குன்றி வெளியே நடமாட இயலாது. கோயிலுக்கோ, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ செல்ல இயலாமல் அவரது வாழ்க்கைத்தரத்தை குறைத்து விடுகிறது. இம்மனிதர் தம் செல்வத்தினாலோ, வசதிகளாலோ வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற இயலாது.
இவர் வலியினால் தனது நடமாட்டத்தையும், செயல்பாடுகளையும் குறைத்து, மற்றவர்களை சார்ந்தே வாழ்க்கையை நடத்தி கொள்கிறார்.மூட்டு தேய்மானம் முற்றிய பிறகு ஒருவர் தனது வாழ்க்கைத்தரத்தை திரும்ப பெற இயலுமா?
மாணிக்கம் என்ற (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஒரு விவசாயி வைத்தியத்திற்கு பிறகு மீண்டும் வயலில் இறங்கி நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்சுவதாக இருக்கட்டும், மேற்கூரிய பெண்மணி மீண்டும் தனது வாழ்க்கையை பழைய நிலைக்கு திரும்பி மகிழ்ச்சியாக கோயிலுக்கு செல்வதாக ஆகட்டும், இவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேறியது எப்படி?
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது இவர்களது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றி விடுகிறது. இச்சிகிச்சை கண்புரை (Cataract) சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு ஈடாக ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றி விடுகிறது என்பது சர்வதேச அளவில் ஒப்புக்கொண்ட உண்மையாகும். இந்த சிகிச்சை உடல்ரீதியாக மட்டும் அல்லது மனரீதியாகவும் ஒருவர் இழந்த, இழக்க இருக்கும் வாழ்க்கையை பெற்றுத்தருகிறது.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் தாயான 45 வயது பெண்மணி, மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுளார். இவரால் குழந்தைகளோடு தரையில் உட்காரவோ இயற்கை (காலை) கடன் கழிப்பதற்காக அமரவோ இயலாமலே தவிக்கிறார்.
நாம் குத்துக்கால் இட்டு உட்காருவதும், சம்மணம் போட்டு தரையில் உட்காருவதையும் வயதான பிறகு செய்யாமல் இருப்பதை வழக்கபடுத்திக் கொள்கிறோம்.
ஆனால் 40 வயதான இளம் குழந்தைகளுக்கு அம்மாவான இந்த பெண்மணியினால் தரையில் உட்கார இயலாமல் இருப்பதை வழக்கமாக கொள்ள முடியாது.
மூட்டு வலி தேய்மானத்தினால் மட்டும் ஏற்படுவது இல்லை. மூட்டில் உள்ள குறுத்து (Meniscus) சிலருக்கு சேதமடைந்து விடுவது உண்டு.
இந்த குறுத்து தேங்காய் சில் போன்று காணப்படும் இந்த குறுத்து மூட்டு எலும்புகளுக்கு நடுவே இருக்கும்.
இந்த குறுத்து பாதிப்பு அடைந்தால் நடப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் தரையில் உட்காருவதும் இந்திய கழிப்பறையில் உட்கருவதும் முடியாது.
.



இந்த பிரச்சனை X-ray மூலம் தெரிவது இல்லை. MRI SCAN என்ற பரிசோதனை மூலம், இதை துல்லியமாக காணலாம். இந்த ஸ்கேன் பரிசோதனையை நடுத்தர வர்க்க மக்களும் எடுத்து கொள்ளலாம்.
 குறுத்து பாதிப்பு ஏற்பட்டால் அதை ஆர்த்ரோஸ்கோப்பி என்னும் அதிநவீன சாவித்துளை அறுவை சிகிச்சை (Key hole) மூலம் மிகவும் வெற்றிகரமாக தற்பொழுது செய்ய முடியும்.
ஆர்த்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்த அன்றே நோயாளி எழுந்து நடந்து வீட்டுக்கு செல்ல முடியும். மேலும் 2 முதல் 6 வாரங்களில் சாதாரணமாக அனைத்து வேலைகளையும் செய்யவும் இயல்பான நிலைக்கு திரும்பவும் முடியும்.

Dr.S.சொக்கலிங்கம் D.Ortho FRCS(Glasgow) FRCS (Trauma&Ortho), UK
காவேரி மருத்துவமனை, ராயல் ரோடு, கண்டோன்மென்ட், திருச்சி-1.
போன்:0431-4077777 / 9715377788













No comments: